சிறப்புப் பட்டிமன்றம் 14-11-2024
சிறப்புப் பட்டிமன்றம் 14-11-2024
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!!' என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கிணங்க கத்தாரில் செயல் பட்டு வரும் கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நவம்பர் 14, 2024 மாலையில் பாரத் டேஸ்ட் ரெஸ்ட்டாரெண்டில் உள்ள அரங்கில் வைத்து நடைபெற்றது.
சொ வே: நிஸார் நிகழ்ச்சியின் நெறியாளராக பங்கு கொண்டு சொல்வித்து என்ற தலைப்பில் நெறி விளக்கம் அளித்து பட்டிமன்றம் குறித்தும் அது எவ்வாறு தமிழர்களின் பண்பாட்டின் ஒரு அங்கமாக மாறியது என்று அழகுற எடுத்தியம்பி பட்டி மன்றத்தின் நடுவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின்னர் நடுவர் சொ வே: விஜய்ஆனந்த் வெளிநாட்டு வாழ்க்கை சாதனையா? வேதனையா? என்ற தலைப்பை விளக்கி பேச்சாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
“சாதனை” என்ற அணியில் சொ வே: ஸ்டீஃபன், சொ வே: இம்திஸா, சொ வே: எழில் ஆகியோரும், “வேதனை” என்ற அணியில் சொ வே: தொம்மை, சொ வே: சகாயமாலா, சொ வே: பஷீர் அஹமது ஆகியோரும் வலுவான கருத்துகள், தேவையான அளவு நகைச்சுவை துணுக்குகள், தங்களின் சொந்த அனுபவங்கள், எதிரணி பேச்சாளர்களுக்கான பதிலுரைகள், செல்லத்தாக்குதல்கள், போன்றவற்றை பார்வையாளர்களின் ஆர்வம் குன்றாமல் சரியான விகிதத்தில் கலந்து மிகச்சிறப்பாக தொழில்முறைப் பேச்சாளர்களுக்கிணையாகப் பேசியதும் பேச்சாளர்களைக் குறுக்கிட்டு நடுவர் சொ வே: விஜய்ஆனந்த் அதிக நேரமெடுக்காமல் துரிதமாக அவர்கள் பேசியதைப்பாராட்டி மேலும் மெருகேற்றிப் பேச்சாளர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததும் பார்வையாளர்களின் கைத்தட்டல்களின் மூலமாகவும் மகிழ்வின் வெளிப்பாடான சிரிப்பொலிகள் மூலமாகவும் அரங்கத்தை நிறைத்தது சுகம்!
நடுவர் சொ வே: விஜய்ஆனந்த் இரு அணியினரின் வாதங்களிலும் சிறப்பான கருத்துகளையெல்லாம் தொகுத்துக்கூறி சீர்தூக்கிப் பார்த்து வெளிநாட்டு வாழ்க்கை சோதனை தான் என்ற தீர்ப்பை வழங்கினார். ஒவ்வொரு பேச்சாளரும் பேசி முடித்ததும் அவர்களின் சிறப்பையும் அவர்கள் பேசியதில் சிறந்ததையும் குறிப்பிட்டு பார்வையாளர்களை பேச்சாளர்களுக்கு உற்சாகக் கரவொலி எழுப்பச்சொன்னது மிகவும் சிறப்பு!
மன்றத்தலைவி சொ வே: இம்திஸா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூற விழா சிறப்புற நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.